தேசபந்துவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை
தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 25ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 25ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து பிணை பெற்று செல்லும் போது நீதிமன்ற உத்தரவை மீறிச் சென்றமையின் காரணமாக இவ்வாறு மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல பயன்படுத்திய காரின் உரிமையாளரையும் எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல அனுமதி பெற்று மாத்தறை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று(21) நீதிமன்றத்தில் மனு ஒன்றின் ஊடாக சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.
இதற்கமையவே தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.